அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு



காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதிமூலவரான அத்திவரதர் சிலை, அந்த கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில், ஒரு தனி நீரடி மண்டபத்தில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்கு வெளியே எழுந்தருள செய்யப்படும்.
நடப்பாண்டில் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கியது. 31 நாட்கள் சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும் என்பதால் நாள் தோறும் அலை அலையாக பக்தர்கள் காஞ்சிபுரத்தில் திரண்டனர்.
5 லட்சத்துக்கும் அதிகமானோர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு நள்ளிரவையும் தாண்டி அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வி.ஐ.பி. தரிசனம் இல்லாததால் பொதுதரிசனப் பாதையில் வந்தவர்கள் 2 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து திரும்பியதாக தெரிவித்தனர்.
இன்று காலை சிறப்பு பூஜையும், யாகமும் நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு அத்திவரதரை, கோவிலுக்குள் உள்ள அனந்தசரஸ் குளத்திற்கு எழுந்தருளச் செய்யும் பணி தொடங்கி இரவு 11 மணிக்கு நிறைவடையும்.